28 ஏர்வாடி மனநோயாளிகள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றம்
ஏர்வாடி: ஏர்வாடி தீ வைப்புச் சம்பவத்தை தொடர்நது அங்கு தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த 7 பெண்கள் உள்ளிட்ட 28 மனநோயாளிகளை, போலீசார் கைது செய்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த 2001ல் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா பகுதியில் நடந்த கோரமான தீ விபத்தில் 28 மனநோயாளிகள் பலியாயினர். இதையடுத்து தமிழக அரசு அங்கிருந்த தனியார் மனநல மருத்துவமனைகளை மூட உத்தரவிட்டது.
ஆனால், மனநோயாளிகள் ஏர்வாடிக்கு கொண்டு வரப்படுவதை தடுக்க முடியவில்லை. இங்கு கொண்டு வந்தால் குணமடைக்கூடும் என்ற நம்பிக்கையில் மனநோயாளிகளின் உறவினர்கள் அவர்களை இங்கு விட்டுச் சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் ஏர்வாடியில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஹசீனா (27) என்ற மனநோயாளி, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து ஹசீனா கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றிக் கொண்டிருந்த 46 பேரைப் பிடித்து, தர்ஹா நிர்வாகத்திடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதில், 28 பேர் (அவர்களில் 7 பேர் பெண்கள்) மட்டும் மனநிலை பாதித்தவர்கள் என்பத் தெரியவந்தது. மற்றவர்கள் பிச்சைக்காரர்கள் என்பது விசாரணைக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார், 28 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications