கோவையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா படம் எரிப்பு
கோவை: கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யவேண்டும், அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு தமிழர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. இதனால் பல மாணவர்கள் அதிக சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இந்நிலையில் ஆவேசமடைந்த அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களது படங்களை அடித்து, தீ வைத்து எரித்தனர். காங்கிரஸ் கட்சி கொடிகள் இரண்டை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.