தீக்குளிப்பை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் போலீஸ் குவிப்பு
சென்னை: முத்துக்குமார் தீக்குளித்ததைப் போன்று மேலும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலக வளாகங்களில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சாஸ்திரி பவனில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
எழும்பூர் கென்னத் சந்தில் உள்ள தபால் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள இலங்கை சுற்றுலா விடுதி முன்பு பெண் போலீசார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவை தவிர சாஸ்திரிபவன், பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவன், அகில இந்திய வானொலி நிலையம், ரிசர்வ் வங்கி, தேனாம்பேட்டை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகம் உள்பட பல மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதிகாப்பு போடப்பட்டு உள்ளது.
வன்முறையில் ஈடுபடுகிறவர்களை தடுப்பதற்காக போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களை உடனடியாகக் கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.