மும்பை தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு பெட்ரோல் பங்க் உரிமம்
மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு நிலைய உரிமத்தை நேற்று பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியாரா வழங்கினார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தேசிய பாதுகாப்புப் படை வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே, ஏ.சி. அசோக் காம்தே உள்ளிட்ட 18 பேர் பலியானார்கள்.
நேற்று மும்பையில் நடந்த விழாவில் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியாரா பலியான 18 பேரின் குடும்பத்தினருக்கு பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு நிலைய உரிமத்தை வழங்கினார். இதற்கான நிலங்களை மகாராஷ்டிர அரசு வழங்கியுள்ளது.
இவற்றில் 4 பெட்ரோல் பங்க் மற்றும் 4 எரிவாயு நிலையங்கள் மும்பை நகருக்குள் இருக்கிறது.
அப்போது தியாரா கூறுகையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குழந்தைகளின் கல்விக்கு தேவையான வசதிகளை செய்ய கமிட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவராக எச்.டி.எப்.சி வங்கி தலைவர் தீபக் பரேக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு 4 கோடி ரூபாய் வரை நிதி கிடைக்கும்.
தாக்குதலில் சேதமடைந்த காமா மருத்துவமனைக்கு கெய்ல் நிறுவனம் 20 கோடி ரூபாய் வழங்கவிருக்கிறது என்றார்