மக்களின் உணர்வை வெளிப்படுத்தவே வேலைநிறுத்தம்: வைகோ
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார். அதற்காகத்தான் தமிழர்களின் உயிர் மூச்சை அழிக்கின்ற நேரம் இது என்று கூறி வருகின்றார். இதற்கு இந்திய அரசும் துணை போகிறது.
ஆயுதஉதவி, ராணுவ பயிற்சி உதவி ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வரும் மத்திய அரசு இதுவரை போர் நிறுத்தம் ஏற்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 4-ந்தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது.
முழு அடைப்பு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்கிறார்கள். ஒரு அரசே முழு அடைப்பு நடத்தக்கூடாது என்பது தான் உச்சநீதிமன்றத்தின் வழக்கே தவிர மக்களின் தனிப்பட்ட எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என யாரையும் வற்புறுத்த மாட்டோம், கட்டாயப்படுத்த மாட்டோம்.
இலங்கைத் தமிழர்களின் நிலையை எண்ணி கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து இதில் பங்கேற்பார்கள்.
கடைகளை மூடி தங்களது கொந்தளித்துப் போயுள்ள மனதை வெளிப்படுத்துவார்கள்.
இளைஞர் முத்துக்குமார் தீக்குளிப்பால் மக்கள் கொந்தளித்துப் போன மன நிலையில் உள்ளனர். இதை அணைக்க முதல்வர் கருணாநிதி வழி வகை செய்ய வேண்டும் என்றார் வைகோ.