திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் நீடிக்கிறது
திருச்சி: திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு டாக்டர்கள் கோரியும் அதை மாணவர்கள் நிராகரித்து விட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.
அனைவரும் சோர்வடைந்து விட்டனர். இதையடுத்து அர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கோரினர். ஆனால், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மாணவர்கள் கூறி விட்டனர்.
மொத்தம் 27 பேர் உண்ணாவிரதம் தொடங்கினர். இவர்களில் சதீஷ், சதீஷ்குமார், தமிழரசன் ஆகிய 3 மாணவர்கள் நேற்று முன்தினம் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை உண்ணாவிரதம் இருப்பவர்களில் மேலும் 12 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே சோர்ந்து போய் படுத்து கிடந்தனர். இதுபற்றிய தகவலை போலீசார் அரசு டாக்டர்களுக்கு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து 12 மாணவர்களின் உடல்நிலையையும் பரிசோதித்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து சட்டக்கல்லூரி முதல்வர் இசைமதி, திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சின்னச்சாமி ஆகியோர் அங்கு வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி மாணவர்களிடம் கேட்டனர்.
ஆனால் மாணவர்களோ நாங்கள் உயிரை விட்டாலும் இங்கேயே தான் விடுவோமே தவிர உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். உடல் நிலை கருதி மயக்கம் அடைந்த மாணவர்களாவது சிகிச்சைக்கு செல்லும்படி கேட்டும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications