மருத்துவமனை மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை தாக்குதல்: ஐ.நா
புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனையை இலங்கை வான்படை தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்றுடன் 3வது முறையாக மருத்துவமனையை அது கடுமையாக தாக்கியுள்ளது.
போரில் காயமடைந்தவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கைப் படைகள் கொத்து வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வீஸ் கூறுகையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது கொத்து குண்டுகளை வீசி இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மருத்துவமனை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
அங்குள்ள நோயாளிகள், மருத்துவமனைப் பணியாளர்கள், எங்களது சேவையாளர்கள், அவர்களது குடும்பத்தினரின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையை தொடர்ந்து தாக்கி வருகிறது இலங்கைப் படை என்பது குறிப்பிடத்தக்கது.