பெர்லினில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டது
பெர்லின்: பெர்லின் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தை சிலர் தாக்கினர். இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை, இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபாயா ராஜபக்சே கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழர்கள் மீதான தாக்குதலை மிகைப்படுத்திப் பேசக் கூடாது, ராணுவத் தாக்குதலை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காட்டக் கூடாது. மீறி நடந்தால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தூதர்களையும், சிஎன்என் போன்ற வெளிநாட்டு டிவி நிறுவனங்களின் ஊழியர்களையும் இலங்கையை விட்டு துரத்தியடிப்போம் என அவர் மிரட்டியிருந்தார்.
இந்த நிலையில் பெர்லின் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது.
இதையடுத்து தூதரகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலித கொஹனா உறுதிப்படுத்தியுள்ளார். இதில் யாரும் காயமடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.