இன்போசிசை தேடி ஓடும் சத்யம் வாடிக்கையாளர்கள்
டெல்லி: சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் தங்களை நாடி வருவதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சத்யம் நிறுவனத்தை தடம் புரளச் செய்து விட்டு ஒதுங்கிக கொண்டார் ராமலிங்க ராஜு. இப்போது அவரும், அவருடைய தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கத்தில் தீபக் பரேக், கிரன் கார்னிக் ஆகியோரை உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்தது.
இந்நிறுவனத்தை கைப்பற்ற பல முன்னணி நிறுவனங்கள் நான், நீ என்று போட்டி போட்டு கொண்டு வருகின்றன. இந்நிலையில் டிசிஎஸ், சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் சிலர் தங்களை நாடி வருவதாக தெரிவித்தது. இந்த வரிசையில் இரண்டாவதாக இன்போசிஸ் சேர்ந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் டி.வி.மோகன்தாஸ் பைய் கூறுகையில்,
சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் சிலர் எங்களை தேடி வந்தனர். அவர்களாகவே வந்துள்ளனர். நாங்கள் யாரையும் அணுகவில்லை.
எங்கள் நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் திட்டத்துக்கு ஒத்து வரும் என்றால் அவர்களை எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றி கொள்வோம். சத்யம் நிறுவனத்தின் புது உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இன்போசிஸ் நிறுவனத்தால் தங்களது லாப விகிதத்தை தக்கவைத்து கொள்ள முடியும். தேவையில்லாத செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளோம். வேலைக்காக வெளிநாடு சென்றுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க இருக்கிறோம் என்றார் மோகன்தாஸ்.