நானோ வேண்டுமா?.. ரு.70,000 கட்டுங்க!
அகமதாபாத்: நானோ கார்களுக்கு பிப்ரவரி இறுதியில் புக்கிங் ஆரம்பிக்கப் போவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ.1 லட்சம் மதிப்பிலான மக்கள் கார்கள் எனப்பட்ட நானோ கார்கள் எப்போது மார்க்கெட்டுக்கு வரும் என்பதே தெரியாத நிலையில், டாடா மோட்டார்ஸும், பாரத ஸ்டேட் வங்கியும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, நானோ கார்கள் வாங்க விரும்புவோர் பிப்ரவரி இறுதியில் டாடா மோட்டார்ஸ் ஷோரூம் கிளைகள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளில் ரூ.70 ஆயிரத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்தத் தொகையை செலுத்தியதற்கு உடனடியாக ரசீது மட்டும்தான் தருவார்கள். ஆனால் கார் டெலிவரி எப்போது என்று சொல்ல மாட்டார்களாம்.
ஸ்டேட் வங்கியின் 1000 கிளைகளில் இந்த முன்பதிவு வசதி செய்யப்படும். மேலும் இந்த கிளைகளின் மூலம் நானோ வாங்க கடனும் கிடைக்கும் என்பது முக்கியமானது.
கார் விற்பனை டல்லடித்துக் கிடக்கும் இந்த நேரத்தில், எஸ்பீஐயுடன் ஏற்பட்டுள்ள இந்த புதிய கூட்டணி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.700 கோடிவரை சில நாட்களிலேயே வசூலித்துத் தந்துவிடும் என நம்புகிறது டாடா நிறுவனம்.
நானோவுக்கென்று அமைக்கப்படும் தொழிற்சாலை வரும் 2010-ல்தான் இந்தத் தொழிற்சாலை செயல்படத் துவங்குமாம். அதற்கு முன் குறைந்த அளவில் நானோ கார்களை தங்கள் உத்தராஞ்சல் கிளையிலிருந்து உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது டாடா.
எடுத்த எடுப்பில் ஒரு லட்சம் கார்களுக்கான ஆர்டர்களைப் பெற முடிவு செய்துள்ள டாடா, முதல் மாதத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவது வெறும் 3000 கார்கள் மட்டுமே. இதனால் 50 சதவிகிதம் வரை ப்ரிமியம் விலையில் கார்களை விற்கவும் திட்டமிட்டுவருகிறது டாடா.
குஜராத் தொழிற்தசாலைப் பணிகள் முடிந்தபிறகு வருடத்துக்கு 2.5 லட்சம் நானோ கார்கள் உற்பத்தியாகுமாம். அப்போது காத்திருக்கவேண்டிய நிலைமை வராது என அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா... ரு.1 லட்சத்துக்கு கார் என்பதெல்லாம் சும்மாதானா!