கல்லூரிகளை அரசு மூடியதை எதிர்த்து வழக்கு
சென்னை: தமிழக அரசு அனைத்துக் கல்லூரிகளையும் மூட உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர் கே.ஏ பிரபாகரன் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். பொங்கல் விடுமுறைக்குப் பிறகு எங்கள் கல்லூரி ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவர்களிடையே அமைதியின்மை நிலவுவதால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை காலவரையின்றி மூட வேண்டும் என்று ஜனவரி 31-ம் தேதி அரசு உத்தரவிட்டது.
எங்களுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற உள்ளன. கல்லூரிகளை காலவரையின்றி மூடியுள்ளதால் எங்கள் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கல்லூரி அமைதியான சூழ்நிலையில் நடைபெற்று வந்தது.
மாணவர்களிடையே அமைதியின்மை நிலவினால், கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்; கல்லூரிகளை மூடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இந்த உத்தரவால் மாணவர்களின் கல்வி பெறும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரி விடுதிகள் மூடப்பட்டதால் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.