நாகூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
நாகூர்: நாகூரில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், நாகூர் தும்பைப்பூ மடத் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (24). இவர் மீது கொலை, கொள்ளை வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் நாகூர் அருகே பைக்கால் என்ற இடத்தில் வந்த போது, அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்தை தடுத்து நிறுத்தி அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் வினோத் சரிந்தார். அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடி விட்டது.
வினோத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி் வந்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.