திமுக - காங்., கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் - டி.கே. ரங்கராஜன்
திண்டுக்கல்: வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுக -காங்கிரஸ் கூட்டணியை நிராகரிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டிகே.ரங்கராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசுகையில்,
காங்கிரஸ் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் மீது நடத்திய தாக்குதல்களை நாங்கள் மறக்கவில்லை. அதே வேளையில் தேசத்தின் நன்மை கருதி மதவெறி சக்திகள், மத்தியில் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசை ஆதரித்தோம்.
காங்கிரஸ் கட்சி தன்னிச்சையான முடிவெடுத்து அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியதால் தான் நாங்கள் அவர்களுடைய ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றோம்.
அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, பாட்டாளி மக்கள் கட்சியின் அமைச்சர் அன்புமணி ராமதாசும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் நியாயமானது இல்லை எனும் போது திமுக, மத்திய அமைச்சர்கள் ஏன் அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்.
கலைஞர் 5வது முறையாக முதல்வராகியுள்ளார். தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார். மேற்கு வங்கம் போல், கேரளாவைப் போல் நிலம் எடுத்து விநியோகிப்பதாகச் சொன்னார். கையளவு நிலம் என்றாலும் கூட அதனை பிரித்துக் கொடுப்போம் என்றார்.
எதற்கெடுத்தாலும் நாங்கள் கேரளாவில் செய்ததைக் காட்டிலும் கூடுதலாக செய்வதாக சொல்கிறார். 2006ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வெற்றி பெற்று அச்சுதானந்தன் முதல்வரான பிறகு 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து உள்ளது.
அந்த நிலங்கள் டாடா நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவை. அதை எடுத்து விநியோகம் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் ஏன் அது போல் செய்யவில்லை?
கலைஞர் அவர்களே உங்களது அரசியல் பாதையில் தடுமாற்றம் இருக்கிறது.
சிபிஎம், சிபிஐ எங்களுக்கு வேண்டாம். காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை இந்த 5 வருட ஆட்சியை நீடித்து விடலாம் என்று கூட நினைக்கலாம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை நம்பி இருக்கிறீர்கள், காங்கிரஸ் கட்சி உங்களை நம்பி இருக்கிறது. ஆனால் மக்கள் வரும் தேர்தலில் உங்கள் இருவரையும் நிராகரிக்கப் போகிறார்கள். அப்படிப்பட்ட புதிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்றார்.