இதய அறுவை சிகிச்சை - 110 குழந்தைகளுக்கு நாராயணி பீடம் நிதியுதவி!
வேலூர்: ஏழை குழந்தைகள் 110 பேரின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஸ்ரீ நாராயணி பீடத்தின் சார்பில் ரூ. 1.50 கோடியினை நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மா முன்னிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிறுவனர் சக்தி அம்மாவின் 33வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆரோக்யா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 330 குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக 110 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி வழங்கும் விழா நாராயணி பீடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மா தலைமை வகித்தார். விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 110 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி வழங்கினார்.
அப்போது, நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மா பேசுகையில்,
ஒரு மனிதனுக்கு அமைதியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்றால் அது ஆன்மீகத்தால் மட்டுமே முடியும். அவைகள் இந்து சமயத்தின் பக்தி மார்க்கத்தில் நிறையவே உள்ளது.
ஆன்மீகம் பற்றி மடங்கள் மட்டுமே பேசினால், அது ஒரு சிலரை மட்டுமே போய்ச் சேரும்.
சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும். அதனை செய்ய அரசால் மட்டுமே முடியும். இதற்கு பள்ளி பாட திட்டத்தில் ஆன்மீகம் இடம் பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications