மும்பை தாக்குதலில் வங்கதேசம், துபாய்க்குப் பங்கு - பாக். திடீர்!
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் வங்கதேசத்திற்குப் பங்கு இருக்கிறது. இறந்த தீவிரவாதிகளில் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் என பாகிஸ்தான் அரசின் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பு உறுதியானதை அடுத்து, இந்தியா அங்கிருக்கும் தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என கேட்டது. முதலில் அதை மறுத்த பாகிஸ்தான் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இறுதிக்கட்ட விசாரணை முடித்துவிட்டு இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அறிக்கையை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த அறிக்கையில் மும்பை தாக்குதல் சம்பவத்தில் வங்கதேசத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டை சேர்ந்த டான் பத்திரிகை செய்தி வெளியி்ட்டுள்ளது.
அதில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தெற்கு ஆசியாவை சேர்ந்த பல முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. அதில் மத்திய கிழக்கு ஆசியாவை சேர்ந்த சில தீவிரவாத இயக்கங்களும் இருக்கின்றன.
இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி) என்ற அமைப்புக்கு தொடர்பு உள்ளது. தாக்குதலுக்கு திட்டமிடுவதிலும், அதற்கான பயிற்சி கொடுப்பதிலும் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது வங்கதேசத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.
இத்தாக்குதலுக்கான திட்டம் பாகிஸ்தானில் தீட்டப்படவில்லை. அவை துபாயில் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவை சேர்ந்த ஒரு இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் இருக்கும் சிலரின் உதவி இல்லாமல் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்க முடியாது.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறையும், அமெரிக்காவை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரி ஒருவரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறுகிறது டான்.