வேதாந்தா அலுமினியம் நிறுவனத்திற்கு மேடாஸ் இன்பிரா வக்கீல் நோட்டீஸ்
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜுவின் மகன்களுக்குச் சொந்தமான மேடாஸ் இன்பிரா நிறுவனம், வேதாந்தா அலுமினியம் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரு வங்கி உத்தரவாதத்தைப் பயன்படுத்தி மோசடியாக ரூ. 64 கோடி பணத்தை எடுத்து விட்டதாலும், அதை திருப்பிக் கொடுக்க மறுப்பதாலும் வேதாந்தாவுக்கு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது மேடாஸ்.
ஜனவரி 20ம் தேதி இந்தப் பணத்தை வேதாந்தா நிறுவனம் எடுத்துள்ளதாம்.
கடந்த ஆண்டு மே மாதம் வேதாந்தா அலுமினியம், மேடாஸ் இன்பிரா நிறுவனத்திற்கு ஒரு குடியிருப்பை நிர்மானிக்கும் ஆர்டரை வழங்கியது. இதற்காக இரு வங்கி உத்தரவாதங்களை மேடாஸ் நிறுவனம் வேதாந்தாவுக்கு வழங்கியிருந்தது.
அந்தப் பணத்தைத்தான் வேதாந்தா வங்கியிலிருந்து மோசடியாக எடுத்து விட்டதாக தற்போது கூறியுள்ளது மேடாஸ்.
வக்கீல் நோட்டீஸ் குறித்து வேதாந்தா தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.
மேடாஸ் நிறுவனம் இதுதொடர்பாகவ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனது கான்டிராக்டை வேதாந்தா அலுமினியம் துண்டிக்கவும் இல்லை. மேலும், மேடாஸ் நிறுவனத்தின் நிபந்தனைகளை முழுமையாக மீறி நடந்து கொண்டுள்ளது.
கான்டிராக்டை முறித்துக் கொண்டால் மட்டுமே தனக்கு வழங்கப்பட்ட வங்கி உத்தரவாதப் பணத்தை வேதாந்தா நிறுவனம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் கான்டிராக்ட் இன்னும் அமலில் உள்ள நிலையில் பணத்தை எடுத்திருப்பது மோசடித்தனம், திருட்டுத்தனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கான்டிராக்டின் மொத்த மதிப்பு ரூ. 232 கோடியாகும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடியிருப்புகளை மேடாஸ் கட்டித் தர வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த திட்டத்தில் ரூ. 35 கோடி மதிப்பிலான பணிகளை மேடாஸ் முடித்து விட்டது. மேலும் ரூ. 10 கோடிக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர ரூ. 30 கோடி மதிப்புக்கு பொருட்களையும் மேடாஸ் நிறுவனம் வாங்கிப் போட்டுள்ளது.
இந்த நிலையில்தான் வேதாந்தா நிறுவனம், மேடாஸ் கொடுத்து வைத்திருந்த உத்தரவாதப் பணத்தை எடுத்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications