லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்- ஏட்டுகள் சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்!
கோவை: கோவையில் திருட்டு சிடி விற்றவர்களிடம் லஞ்ச கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுக்கள், அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வருவதை கண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் திருட்டு வீடியோ தடுப்பு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் உள்ளன. இந்த அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணசாமி, ஏட்டாக முகமது கான், செல்வராஜ், ஆறுமுகம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களின் சிடி-க்கள் திருப்பூர் நகர பகுதிகளில் உள்ள சில வீடியோ கடைகளில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசார் சுந்தராபுரம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, ஏராளமான புதுப்பட சிடிக்கள் போலீசார் வசம் சிக்கியது. இது தொடர்பாக அந்த கடைகளில் இருந்த 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய கோவை திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசார், தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் சாதாரண பிரிவுகளில் வழக்கு போடுவதாகவும், இல்லையெனில் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சண்முக பிரியாவிடம் மணி என்பவர் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அணுப்பிய ரசாயன பவுடர் தடவிய பணத்தை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமியிடம் கொடுக்க மணி காத்திருந்தார்.
அப்போது அங்கு அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சண்முக பிரியா, இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர்.
அவர்களை கண்டதும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி, ஏட்டுகள் முகமது கான், செல்வராஜ், ஆறுமுகம் ஆகிய நால்வரும் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து சென்னையில் உள்ள திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அவர்கள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.