நன்மாறன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை:மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நன்மாறன் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை கிழக்குத் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்மாறன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி மதிமுக வேட்பாளர் பூமிநாதன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2006 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே, தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. அதை சரியாக எண்ணவில்லை.
மேலும், செல்லாத ஓட்டுக்களை தபால் ஓட்டுக்களுடன் சேர்த்து நன்மாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எனவே, ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும், அவர் வெற்றி பெற்றது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் பூமிநாதன் கூறியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி முருகேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில், மனுதாரர் புகார்களுக்கு போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.