புதுக்கோட்டை அருகே போலி மதுபான தொழிற்சாலைக்கு சீல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே நடைபெற்று வந்த போலி மதுபான தொழிற்சாலைக்கு போலீசார் சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே லட்சுமணன்பட்டி உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்மமான முறையில் ஒரு தொழிற்சாலை இயங்கி வந்தது.
அங்கு போலியான மதுபானங்கள் தயார் செய்யப்பட்டு, அவைகளை அட்டைப் பெட்டியில் வைத்து வெளி மாவட்டங்களுக்கு சிலர் சப்ளை செய்து வந்துள்ளனர்.
இது குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து அந்த போலி மது ஆலையைக்கு சீல் வைக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் புதுக்கோட்டை எஸ்.பி. மூர்த்தி உத்தரவிட்டார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கீரனூர் டிஎஸ்பி, மது விலக்கு அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயகுமார், மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் போலி மது தயாரிக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
போலி மது தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்கள், மற்றும் அங்கு அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 10,752 மது பாட்டில்கள், 118 கேன்கள், 8 மூட்டை மூடிகள், காலி பாட்டில்கள், மது நிரப்ப உதவும் இயந்திரம், அவைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்,மற்றும் லாரி போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. போலி மதுபான தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றர்.
விசாரணையில் அங்கு திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி சாத்தையா மற்றும் அவரது ஆதரவளர்கள் சிலர் அடிக்கடி வந்து போன வண்ணம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.