9 வயது சிறுமியிடம் செக்ஸ் வக்கிரம் - மக்கள் கொந்தளிப்பு - ஆசிரியர் கைது
கோவை: கோவையை அடுத்த சங்கனூரில் மூன்றாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த சபல ஆசிரியரின் செயலால் பொதுமக்கள் கொந்தளித்து போராட்டத்தில் குதித்தனர். பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த அசிங்கம் பிடித்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
மிருகக் குணம் படைத்த அந்த ஆசிரியரை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை அருகில் உள்ளது சங்கனூர். இங்கு மாநகராட்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ் (47). பள்ளியில் படிக்கும் மாணவிகளை தகாத வார்த்தைகளில் திட்டுவது, அவர்களிடம் முறைதவறி நடப்பது என பல புகார்கள் இவர் மீது ஏற்கனவே அடுக்காக வந்த வண்ணம் இருந்தது.
ஆனால் பள்ளி நிர்வாகம் காம வெறி பிடித்த சுரேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவிகள் நெகம் வெட்டுவது தொடர்பாக ஒரு மாணவியை ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக திட்டியதோடு அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை ஆபாசமாக மொபைலில் படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தை பள்ளி முடிந்தவுடன் அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
ஆனாலும் சபல ஆசிரியர் சுரேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொது மக்கள் அந்த பள்ளி முன்பு குவிந்தனர். சபல ஆசிரியர் சுரேசை கைது செய்ய கோரி பள்ளியை முற்றுகையிட்டனர்.
மேலும் ஆவேசம் அடைந்த பொது மக்கள் பள்ளி கதவு, சன்னல்களை கல் வீசி உடைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில் எஸ்பி கண்ணன் கூறுகையில், ஆசிரியர் சுரேசை கைது செய்துள்ளோம் என்றார்.
வழக்கமாக இந்த வழக்கில் கைதாவோருக்கு சில ஆயிரம் பணத்தை அபராதமாக கட்டி விட்டு வெளியே வந்து விடுவது வழக்கம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரா கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சமீபத்தில்தான் தகவல் தொழில்நுட்பச் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி, சிறார்களை ஆபாசப் படம் எடுத்தால், குறைந்தபட்சம் 5 ஆண்டு தண்டனை, ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்கிறது.
ஆனால் சிறுமிகளிடம் அராஜகமாக நடப்போரிடம் இந்த சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகிக்க தவறுகிறார்கள். சாதாரண சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதால் குற்றவாளிகள் வெறும் அபராதத்தோடு எஸ்கேப் ஆகி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
கோவை சம்பவம் குறித்து சமூகசேவகி நான்சி தாமஸ் என்பவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதத்தில் இது நான்காவது வழக்கு. இங்கு மட்டுமல்லாது, சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் இதேபோல ஆசிரியர்கள் அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர்.
மனதுக்குள் காமவெறியுடன் இருப்பவர்கள் இதுபோன்ற பணியில் சேர்ந்து தங்களது இச்சையைத் தீர்த்துக் கொள்ள முயலுகிறார்கள் என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் சுரேஷிடமிருந்து, அவரது செல்போனைக் கூட போலீஸார் இன்னும் கைப்பற்றவில்லை என்று தெரிகிறது. செல்போன் எங்கிருக்கிறது என்பதை தேடி வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.