திருச்சி - மதுரை பயணிகள் ரயில் திடீர் ரத்து - பயணிகள் அவதி
மதுரை: திருச்சி - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை - திருச்சி இடையே 18 பெட்டிகளுடன் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் திருச்சி சென்றடைந்ததும், 12 பெட்டிகள் அங்கு நிறுத்தப்படும். மீதமுள்ள ஆறு பெட்டிகள் திருச்சி - கும்பகோணம் பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது.
திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் 12 பெட்டிகள் வருவாய் இன்றி நிறுத்தி வைக்கப்படுவதால் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு , திருச்சி - மதுரை இடையே 12 பெட்டிகளுடன் ராக்போர்ட் பயணிகள் ரயிலை சோதனை அடிப்படையில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அந்த அடிப்படையில், ஜனவரி மாதம் வரை இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் வருகையால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி, இந்த ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே, திருச்சி - மதுரை ராக்போர்ட் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கக் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.