பதவி ஏற்ற 2வது நாளே புகாரில் சிக்கிய 'சத்யம் மூர்த்தி'!
சத்யம் நிறுவனத்தை இவ்வளவு பெரிய இக்கட்டில் தள்ளிவிட்ட அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு, மோசடிகளை ஒப்புக் கொண்டு சரணடைவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் ஏஎஸ் மூர்த்தி தனக்கு சொந்தமான 40 ஆயிரம் பங்குகளை நல்ல விலைக்கு விற்று பணத்தை பத்திரப்படுத்தியிருக்கிறார்.
அப்படியானால் சத்யம் ராஜுவின் மோசடி இவருக்கு முன் கூட்டியே தெரியுமா... இவருக்கும் அதில் பங்கிருக்கிறதா? என விசாரணை அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தப் பங்குகளை விற்கும்போது, சத்யம் நிறுவனத்தின் வெளிநாட்டுப் பிரிவுக்கு தலைவராக இருந்தார் மூர்த்தி.
மூர்த்தியின் இந்த பங்குகள் விற்பனை குறித்து இப்போது சத்யம் ராஜுவை விசாரித்து வரும் செபி அமைப்புதான் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 12-ம் தேதி 7000 பங்குகள் (ரூ.220.75), டிசம்பர் 15-ம் தேதி 14 ஆயிரம் பங்குகள் (ரூ.220.40) மற்றும் டிசம்பர் 16-ம் தேதி 19 ஆயிரம் பங்குகளை (ரூ.226.50) விற்றுள்ளார் மூர்த்தி. இவரைப் போலவே இன்னும் சில மூத்த அதிகாரிகளும் அந்தத் தேதிகளில் அதிக அளவு பங்குகளை விற்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூர்த்தி, என் சொந்தக் காரணங்களுக்காக விற்கப்பட்ட பங்குகள் அவை. மற்றபடி வேறு எந்த விஷயத்திலும் என்னைத் தொடர்புபடுத்தாதீர்கள், என்கிறார். ஆனால் டிசம்பர் 16-ம் தேதிதான் மேடாஸ் நிறுவனத்தை வாங்கப்போவதாக ராஜு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பதவியை ராஜினாமா செய்து ராஜு எழுதிய கடிதத்தில், இந்த மோசடிகளுக்கும் மூர்த்தி உள்ளிட்ட சத்யம் நி்றுவன ஊழியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
மைனாம்பதி மர்மம்:
சத்யம் நிறுவனம் சிக்கலுக்கு உள்ளாவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பங்குகளை விற்று பணம் பார்த்தவர்கள் லிஸ்டில் முதலில் இடம் பெற்ற பெயர் ராம் மைனாம்பதி. ராஜுவுக்குப் பின் இடைக்கால தலைமைச் செயலர் அலுவலராக இருந்தவர். இவர் கடந்த ஜூனிலேயே 25 ஆயிரம் பங்குகளை தலா ரூ.480-க்கு விற்று பெரிய அளவில் லாபம் பார்த்துவிட்டார். அப்போதே சத்யம் குட்டு வெளிப்படும் சூழ்நிலை வந்ததாம். ஆனால் தற்காலிகமாக தள்ளிப் போட்டுவிட்டார்களாம் ராஜு பிரதர்ஸ்.
இப்போது மைனாம்பதி குறித்த எந்த தகவல்களும் கிடையாது. விசாரணை அதிகாரிகளும் அவர் இருக்குமிடம் குறித்து எதுவும் தகவல் வெளியிடாமல் மௌனம் காக்கிறார்கள்.
ராஜு சகோதரர்களுடன் கம்பி எண்ணிக்கொண்டுள்ள சத்யம் சிஎப்ஓவான சீனிவாஸ் வட்லாமணி, 92,358 பங்குகளை செப்டம்பர் மாதமே விற்றுள்ளார்.
சொத்துக்களை அடமானமாகத் தந்தது சத்யம்:
இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு அரசுடைமை வங்கிகள் சத்யத்துக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.600 கோடி நிதியுதவிக்கு பிணையமாக தனது அசையா சொத்துக்களான நிலங்கள் மற்றும் கட்டடங்களை தருவதாக அறிவித்துள்ளது சத்யம்.