முதல்வருக்கு ஜெர்மன் டாக்டர் சிகிச்சை
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதிக்கு முதுகு வலி அதிகரித்திருப்பதால் அவருக்கு இன்று ஜெர்மன் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிக்கிறார்.
முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த முதல்வர் கருணாநிதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் அவருக்கு டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் தசை பிடிப்பை அகற்றுவதற்கான சிகிச்சை நடந்தது.
இந்நிலையில் கருணாநிதிக்கு நேற்று மீண்டும் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. இதனால், முதுகு தண்டுவட சிகிச்சையில் புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரால்ப் கார், டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சஜன் ஹெக்டே ஆகியோரைக் கொண்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மூவரும் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.