காங்கிரசின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி: மோடி
நாக்பூர்: இந்தியாவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்து வருகின்றனர். இதற்கு இந்திய மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
ஒரு குடும்பத்தின் கடந்த கால பெருமைகளை தக்கவைக்கும் முயற்சி இந்தியாவின் எதிர்காலத்தை சீர்குலைக்க பார்க்கிறது.
அந்த குடும்பத்தினர் கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றனர். தற்போது நடக்கும் அரசையும் சேர்த்து கொண்டால் அது 42 ஆக அதிகரித்துவிடும்.
தற்போது மன்மோகன் பெயரளவில் மட்டுமே பிரதமராக இருக்கிறார். மற்ற அனைத்து அதிகாரங்களும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தான் இருக்கிறது.
அமெரிக்காவிலும் கடந்த 20 ஆண்டுகளாக இது தான் நடந்து வந்தது. அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்பி ஒபாமாவை அதிபராக்கி உள்ளனர். இதற்கு முன்னதாக சீனியர் புஷ் இரண்டு முறை. அடுத்து பில் கிளின்டன் இரண்டு முறை. பின்னர் ஜூனியர் புஷ் இரண்டு முறை அதிபர் பதவியில் இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்திய தேர்தலில் ஹிலாரி கிளின்டன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் மாற்றத்தை விரும்பிய அமெரிக்க மக்கள் ஒபாமாவுக்கு வாய்ப்பு கொடுத்தனர். இதன்மூலம் புஷ் மற்றும் கிளின்டன் குடும்ப அரசியலில் இருந்து அமெரிக்காவை மீட்டுள்ளனர்.
அதே மாற்றம் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு பாஜகவின் பிரதம வேட்பாளரான அத்வானி போன்ற உறுதியான பிரதமர் வேண்டும். மன்மோகன் போன்ற இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்கள் வேண்டாம் என்றார் மோடி.