தெற்காசியாவில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது இந்தியா: ராஜா
டெல்லி: அமெரிக்காவுடன் சேர்ந்ததால், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பேச்ச மதிப்பதில்லை என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்பிராந்தியத்தில் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது. யாரும் இந்தியாவின் பேச்சைக் கேட்பதில்லை என்பது, சில மூத்த அமைச்ர்களின் அறி்க்கைகளிலிருந்து தெரிய வருகிறது.
தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை சொல்வதை கேட்பதில்லை. மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானும் இந்தியாவின் கோரிக்கைகளை மதிப்பதில்லை.
நமது அண்டை நாடு எதுவும் நம்மை மதிப்பதில்லை. நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். அவமதிப்புக்குள்ளாகி வருகிறோம். இதற்கு காரணம் அமெரிக்காவுடன் நாம் நெருங்கியதுதான்.
நாம் சொல்வதை பாகிஸ்தான் மதிப்பதில்லை என்பதை பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தின் பேச்சுக்கள், அறிக்கைகள் நிரூபிக்கின்றன.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளைச் செய்கிறதா என்பதை காங்கிரஸ் அரசு அதை தெளிவாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு ஆயுதங்கள், ஆள் பலம் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. அவற்றுக்கு ஏன் இந்திய அரசு விளக்கம் தராமல் உள்ளது என்றார் ராஜா.