பட்டப்பகலில் ரவுடி கொலை; சேலத்தில் பயங்கரம்
சேலம்: சேலம் அருகே ஜாமினில் வெளி வந்த ரவுடி ஒருவன் பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியை சேர்ந்த விஜய கண்ணன் என்பவர் பல திருட்டு மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவர் தற்போது தனது இரண்டாவது மனைவி சர்மிளாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பஸ் மீது கல்வீசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். தினமும் வீராணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்திட்டு வருவார்.
நேற்றும் வழக்கம் போல் கையெழுத்திட தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் பிரிவு அருகே 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது.
இதையடுத்து மிரண்டு போன அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால் அக்கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜய கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அப்பகுதியில் வாரசந்தைக்கு மக்கள் கூட்டமாக வந்து போய் கொண்டிருந்தனர். ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் சினிமா பாணியில் ரவுடி ஒருவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று கொலையாளிகளையும் தேடி வருகிறார்கள். அவரது இரண்டாவது மனைவி சர்மிளாவையும் விசாரித்து வருகின்றனர்.