மூட நம்பிக்கையால் 4 மாத பேரனை கொன்ற பாட்டி
தூத்துக்குடி: குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று ஜோதிடர் கூறியதால் குழந்தை மீது அதிருப்தி அடைந்த அதன் பாட்டி, 4 மாதே ஆன அந்தப் பிஞ்சுக் குழந்தையை கிணற்றில் வீசி கொடூரமாகக் கொலை செய்து விட்டார். அப்பாட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூரில் வசித்து வருபவர் பெருமாள் (29). கூலி தொழிலாளி. இவருக்கும் மூலக்கரை ராதாவுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 4 வயதில் கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் மாலையில் ராதாவின் 4 மாத ஆண் குழந்தையை காணவில்லை. வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் அந்த தெருவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேடிப்பார்த்தனர்.
அப்போது வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் குழந்தை பிணமாக மிதந்தது. தகவல் அறிந்தவுடன் ராதா மற்றும் பெருமாள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் குழந்தை எப்படி கிணற்றில் போய் விழுந்தது என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.
உறவினர்களிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது ராதாவின் தாயார் செல்லக்கனி மீது சந்தேக நிழல் படிந்தது. செல்லக்கனியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தான் தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீஸாரிடம் செல்லக்கனி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், எனது மகள் ராதாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு மாதம் கழித்து குழந்தையின் பிறந்த நேரம் எவ்வாறு இருக்கிறது? என்று ஒரு ஜோதிடரை பார்த்து கேட்டேன்.
அதற்கு அவர், ஆண் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இந்த குழந்தையால் உங்கள் குடும்பத்திலும், அவர்கள் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறினார். இதனால் நான் கலக்கம் அடைந்தேன்.
குழந்தையால் எனது மகள் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்று பயந்து கடந்த சில நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்தேன். அப்போது தான் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொன்று விடுவது என்று முடிவு செய்தேன்.
அதன்படி யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கி வந்து அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டேன் என்று கூறியுள்ளார் செல்லக்கனி.