குஜராத்: பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி மீட்பு
மதுரை: குஜராத்தில் கொத்தடிமைகளாக பாலியல் சித்தரவதைகள் அனுபவித்து வந்த சிறுமி உள்பட இரு குழந்தைகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது மணியஞ்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவ செல்வத்தின் மகள் பார்வதி (13) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது), மகன் பன்னீர் செல்வம் (11).
மகள் 7ம் வகுப்பும், மகன் 6ம் வகுப்பும், படித்து வந்தனர். வறுமை காரணமாக அவர்களது படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நிலையூரைச் சேர்ந்த செல்வத்தின் சித்தப்பா நடுக்காடு, முதலைக்குளத்தைச் சேர்ந்த ஜெயராமன், அவரது மைத்துனர் ராஜாமணி மற்றும் பெருமாள் ஆகியோர் செல்வம் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசி, இரண்டு குழந்தைகளையும் குஜராத் மாநிலம் ஓகைவ் என்ற ஊரில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வேலைக்கு சென்ற இடத்திலிருந்து பார்வதி தனது தந்தையை தொடர்பு கொண்டு தன்னை ஜெயராமன் பாலியல் சித்தரவதை செய்வதாகவும், இதனால், தன்னையும், தன் தம்பியையும் அழைத்துச் செல்லும்படி கூறி கதறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் மதுரை மாவட்ட கலெக்டர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
மேலும், தனது குழந்தைகளை மீட்டுத் தருமாறு பிப்ரவரி 5ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிப்ரவரி 12ம் தேதிக்குள் அந்த குழந்தைகள் இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து, போலீசார் பார்வதி, அவரது தம்பி பன்னீர் செல்வம் ஆகியோரை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அவர்களது தந்தை செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த குழந்தைகளை பள்ளியில் உடனே சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்றும், பள்ளியில் சேர்க்கப்பட்ட தகவலுடன் வரும் பிப்ரவரி 16ம் தேதி செல்வம் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், குழந்தைகளை கொத்தடிமைகளாக நடத்திய ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.