இலங்கை விவகாரத்தில் திமுகவைக் குறை கூறுவது நியாயமா? கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியிலே இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்று கூறுவோர், ஆட்சியில் இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக திமுக என்ன செய்தது என்பதை எண்ணிப் பார்த்து விளக்க வேண்டும். இதை மறந்து விட்டு எதிர்க்கட்சி என்றால் போராட்டம் - ஆட்சி என்றால் அடங்கிப் போவது என்று தி.மு.க. செயல்படுவதாகக் கூறுவது நியாயமா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதை தவிர்த்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே என்று நீங்கள் எழுதிய பிறகும் உங்களைத் தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு சிலர் செயல்பட்டும், பேராசிரியருடன் தாங்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால் என்ன விளைவு ஏற்பட்டுவிட்டது, ஒட்டுமொத்தமாக விலகினால்தான் ஏற்படும் என்பதைப் போல ஒரு தலைவர் அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: அவர் ஒரு முடிவுக்கு வந்து பேசுகிறார். நாம் என்ன செய்ய முடியும்? சட்டசபையில் தீர்மானத்திற்கு பதில் அளித்து நான் பேசும்போதே, கழகம் ஆட்சியை விட்டு விலகினால், தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றுதான் கூறியுள்ளேன். இப்போதும் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகினால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள், ஏன் ஈழத் தந்தை செல்வாவின் திருமகன் சந்திரஹாசன் உள்பட "பதவியை விட்டு விலகி விடாதீர்கள்'' என்று சொல்கிறார்களே, அவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் மீது பற்று இல்லாதவர்களா?

கேள்வி: தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றும், இலங்கைத் தமிழர் நலனைப் புறக்கணித்து வந்திருக்கிறது என்றும் ஒருவர் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?

பதில்: தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தது என்று கேட்ட கேள்விக்குத்தான் நான் நினைவில் இருந்தவரையில் பட்டியல் கொடுத்திருந்தேன். அப்போது ஆட்சியில் இருந்தகாலம், எதிர்கட்சியாக இருந்த காலம் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கவில்லை. ஆனால் ஆட்சியில் இருந்த போது தி.மு.க. எதையும் செய்யவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

- 1976-ம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்பட்டதும் ஒரு காரணம் என்று இந்திராகாந்தியே 15.2.1976 கடற்கரை கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

- 1991-ம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்ட போதும், கழக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றே காரணம் கூறப்பட்டது.

- 1989-ம் ஆண்டு நான் டெல்லியில் பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்த போது, தமிழ்நாடு இல்லத்திற்கு வெளிவிவகாரத்துறை நட்வர்சிங்கை அனுப்பி இலங்கை பிரச்சினை குறித்து பல்வேறு விளக்கங்களை அளிக்க செய்தார். தொடர்ந்து பிரதமர் ராஜீவ்காந்தியிடம் பேசிய போது இலங்கைக்கு என்னுடன், மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதாக கூறியதும் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- 11.6.89 அன்றும் 29.6.89 அன்றும் திருச்சியில் நிருபர்களிடம் பேசும் போது, ஈழத் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட முறையான பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்றும், அதற்கான முயற்சிகளில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றும் நான் கூறியதும், தி.மு.க. ஆட்சியிலே இருந்த போதுதான்.

- 5.11.1989 அன்று திருச்சியில் பிரதமர் ராஜீவ்காந்தி பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க. அரசுக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியதும் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- 1989-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பி, பிரதமராக இருந்த வி.பி.சிங்கோடு பேசி, அவரது யோசனையின் பேரில் சென்னையில் துறைமுகம் விருந்தினர் விடுதியில், பல நாட்கள் பல்வேறு போராளிக் குழுவினரை நான் சந்தித்து பேசியது கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான்.

- அதே டிசம்பர் திங்கள் இறுதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து வழக்கறிஞர் சந்திரஹாசன், க.சச்சிதானந்தன், ஈழவேந்தன், வெ.பேரம்பலம், எஸ்.சிவசுப்ரமணியம், எஸ்.சிவானந்தம், க.சிவநாயகன், ர.பத்மநாபன், த.அருணாசலம், ஞானகணேசன், பி.ஆனந்தராஜா, நீதுவான் சிவானந்தன் ஆகியோர் என்னை என் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்ததும் கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான்.

- 7.1.90 அன்று ஈராஸ் பிரிவை சேர்ந்த பாலகுமார், சங்கர், முகிலன் ஆகியோரும் அதற்கு மறுநாள் இலங்கையில் உள்ள இந்திய தூதர் மல்ஹோத்ராவும், அதற்கடுத்த நாள் ஈ.பி.ஆர்.எல்.எப். பிரிவை சேர்ந்த வரதராசபெருமாள், யோக சங்கரி, சந்தன் ஆகியோரும் என்னைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தது, கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முழுவதும் தனித்தனியாக போராளிகளின் பல்வேறு குழுக்களை நான் சந்தித்து பேசி, அந்த விவரங்களையெல்லாம் அப்போது பிரதமர் வி.பி.சிங்கிடம் எடுத்து விளக்கியதெல்லாம் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதுதான்.

- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி "இந்து'' பத்திரிகையாளர் டி.எஸ்.சுப்பிரமணியம் 3.3.90 அன்று எழுதும்போது, கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளை தொடங்கிய போது போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே இருந்த பகைமை உணர்வு தற்போது இல்லை என்றும் தமிழ் போராளி இளைஞர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் கருணாநிதி கடைபிடித்த வெட்ட வெளிச்சமான ராஜதந்திர அணுகுமுறையே காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

- இந்திய அமைதிப்படை திரும்பிய போது முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் வரவேற்கச் செல்லாதது குறித்து பேரவையில் 30.3.1990 அன்று கேள்வியெழுப்பப்பட்டபோது, இலங்கையில் இந்திய ராணுவத்தினரும், தமிழர்களும் பலியாகக் காரணமாக இருந்த இந்திய அரசின் செயலைக் கண்டித்தே நான் வரவேற்கச் செல்லவில்லை என்று பதில் அளித்தது, கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- இலங்கைப் பிரச்சினை குறித்து 90-ம் ஆண்டு ஜுன் திங்கள் 18, 19 ஆகிய நாட்களில் பிரதமர் வி.பி. சிங்கிடம் நான் பேசியதைத் தொடர்ந்து 19-ம் தேதி மாலையில் பிரதமர் இல்லத்தில் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மற்ற மாநில முதல் மந்திரிகளான ஜோதிபாசு, நாயனார், பிஜு பட்நாயக், மகந்தா, சாந்தகுமார், பண்டாரி, டி. ராமச்சந்திரன், மத்திய மந்திரிகளான அருண் நேரு, முப்தி மகமது சயீத், முரசொலிமாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணா, மற்றும் அத்வானி, ஈ.எம்.எஸ்., வாஜ்பாய், சிட்டபாசு, சாமர் முகர்ஜி, இந்திரஜித் குப்தா, பரூக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர்களிடம் நான் விளக்கியது, கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான்.

- இவையெல்லாம் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள்தானே, போராட்டம் நடத்தவில்லையே என்று கேட்கலாம். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் போராட வேண்டிய அளவிற்கு நிலைமைகள் இல்லை.

இருந்தாலும் 90-ம் ஆண்டு ஜுலை திங்களில் அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்படுகின்றனர் என்ற செய்தி வந்ததும் தி.மு.கழகம் போராடாமல் இருந்து விடவில்லை என்பதற்குச் சான்று, 12.7.1990 அன்று நடைபெற்ற கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் 20.7.1990 அன்று ஈழத் தமிழர்களுக்காக ஒரு நாள் முழு அடைப்பும், பொது வேலை நிறுத்தமும் நடத்துவதென்று முடிவெடுத்து, அவ்வாறே நடத்தப்பட்டது.

- தொடர்ந்து 23.8.1990 அன்று முரசொலி மாறன் தலைமையில் வைகோ, தா. கிருட்டிணன், மிசா கணேசன், ஜே.எஸ்.ராஜு, முகமது சகி, ஜி.வெங்கட்ராமன், நாமக்கல் வீரப்பன் ஆகிய கழக உறுப்பினர்கள் பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

- 3.12.1990 அன்று பிரதமர் சந்திரசேகரை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் விளக்கிக் கூறினேன்.

- ஆனாலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு அதிகரிக்க கழக ஆட்சி அனுமதித்து விட்டதாக அபாண்டமாகக் காரணம் கூறி, 142 சட்டமன்ற உறுப்பினர்களை தி.மு.கழகம் கொண்டிருந்த நிலையிலும் - ஆளுநர் பர்னாலா அவர்களை டெல்லிக்கே அழைத்து, மத்திய உள் துறை இணை மந்திரியாக இருந்த சுபோத் காந்த் சகாய் போன்றவர்கள் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை கொடுக்க வலியுறுத்தியும் அவர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பிரதமர் சந்திரசேகர், குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் மூலம் "அதர்வைஸ்'' என்ற விதியை முதன் முதலாகப் பயன்படுத்தி கழக ஆட்சியே கலைக்கப்பட்டது.

- இப்போதும் கூட, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்றும் மனிதச் சங்கிலி என்றும், பேரவையிலே தீர்மானம் என்றும், பிரதமருடன் டெல்லி சென்று சந்திப்பு என்றும் கழகம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் எல்லாம் தற்போது ஆட்சியிலே இருக்கின்ற நிலையிலேதான் என்பதையும் அரசியல் செறிவுடையார் யாரும் மறுக்க முடியாது.

இவையெல்லாம் கழகம் ஆட்சியிலே இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதற்கான அடையாளங்களா என்பதை அவர்கள்தான் எண்ணிப்பார்த்து விளக்க வேண்டும். ஆனால் இதை அவர்கள் மறந்து விட்டு எதிர்க்கட்சி என்றால் போராட்டம் - ஆட்சி என்றால் அடங்கிப் போவது என்று தி.மு.க. செயல்படுவதாகக் கூறியிருப்பது நியாயமா?

கேள்வி: இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்று நீங்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். ஆனால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் இங்குள்ள தமிழர்கள், குறிப்பாக காங்கிரஸ் போன்ற கட்சிக்காரர்கள் தாக்கப்படுவதும், அந்தக் கட்சியினரின் அலுவலகங்கள் சூறையாடப் படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

பதில்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்று கூறிக் கொண்டு இங்குள்ள தமிழர்களைத் தாக்குபவர்களை - உங்களைப் போன்றவர்கள் அடையாளம் கண்டுகொண்டால் போதும். அப்படிப்பட்ட செயல்களை நான் கண்டிக்கிறேன். தயவு செய்து நீங்கள் இதற்காக சட்டத்தை கையில் எடுக்காமல், காவல் துறையினரிடம் புகார் செய்வதே நல்லதுகேள்வி: இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்று நீங்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். ஆனால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் இங்குள்ள தமிழர்கள், குறிப்பாக காங்கிரஸ் போன்ற கட்சிக்காரர்கள் தாக்கப்படுவதும், அந்தக் கட்சியினரின் அலுவலகங்கள் சூறையாடப் படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

பதில்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்று கூறிக் கொண்டு இங்குள்ள தமிழர்களைத் தாக்குபவர்களை - உங்களைப் போன்றவர்கள் அடையாளம் கண்டுகொண்டால் போதும். அப்படிப்பட்ட செயல்களை நான் கண்டிக்கிறேன். தயவு செய்து நீங்கள் இதற்காக சட்டத்தை கையில் எடுக்காமல், காவல் துறையினரிடம் புகார் செய்வதே நல்லது.

கேள்வி: தி.மு.கழக செயற்குழு தீர்மானத்தில் இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்மென்பதில் உறுதியாக இல்லை என்று சொல்வதைப் பற்றி?

பதில்: செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தின் முன் பகுதியிலேயே போர் நிறுத்தம் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருந்தாலும் - இறுதியாக முடிக்கும் போது - "அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதியான நிலை தோன்றவும்'' என்ற வாசகங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் தீர்மானத்தில் "போர் நிறுத்தம்'' பற்றியே வாசகங்கள் இல்லை என்பதைப் போல பேசுகிறார்கள். பொய்யைத்தான் பேசுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பேசுபவர்களிடம் நாம் என்ன செய்ய முடியும்? என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+