கருணாநிதிக்கு தண்டுவட ஆபரேஷன் முடிந்தது

கடந்த 15 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் முதுகுவலி குறையாததால் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் முதுகு தண்டுவட நரம்பு பகுதி இறுக்கமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இறுக்கத்தை போக்குவதற்கான லம்பார் கெனால் டிகம்ப்ரஷன் அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதுகு தண்டுவட நிபுணர் அரவிந்த் ஜெய்ஸ்வால் வரவழைக்கப்பட்டார். அவரது தலைமையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கார்த்திக் கைலாஷ், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் ஐ.எஸ்.நாயுடு, டாக்டர் மகேஷ் வகாமுடி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் பி.எஸ்.சண்முகம், டாக்டர் ராஜ் பி.சிங், டாக்டர் ஏ.வி.சீனிவாசன், டாக்டர் சவுந்தரராசன், டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, முதல்வரின் தனி டாக்டரான டாக்டர் பி.கோபால் ஆகியோர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டது.
இன்று காலை மருத்துவ மனையின் 7வது மாடியில் சிறப்பு அறை ஒதுக்கப்பட்டு அங்கு செயற்கைச் சுவாச கருவி உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும், அறுவை சிகிச்சைக்கான உப கரணங்களும் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. முன்னதாக கருணாநிதிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை சரிபார்க்கப்பட்டன. மேலும் அவரது இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் நல்ல நிலையில் இயங்குவதும் சரிபார்க்கப்பட்டு காலை 7 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது.
சுமார் நான்கு மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்தது. 11 மணியளவில் அறுவைச் சிகிச்சை முடிவடைந்தது. அதன் பின்னர் அவர் 6வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் மார்த்தாண்டம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர் மார்த்தாண்டம் கூறுகையில்,
முதலமைச்சருக்கு முதுகு தண்டுவட பகுதியில் இறுக்கமான நிலை காணப்பட்டது. தண்டுவடத்தில் எல்2, எல்3 தொடர்பு எலும்பின் நரம்புப் பகுதியில் அந்த இறுக்கம் கண்டறியப்பட்டது.
அதில் சிறிதளவு திசுக்களை அகற்றி எலும்புகளை தேய்த்து எடுத்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சை லம்பார் கெனால் டிகம்ப்ரஷன் எனப்படும். காலை 7.00 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை 11 மணியளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
சிறிது நேரத்திலேயே முதலமைச்சருக்கு மயக்கநிலை தெளிந்து உணர்வு திரும்பியது. தற்போது அவர் சகஜ நிலையில் இருக்கிறார். தன்னை பார்ப்பவர்களை அவர் அடையாளம் கண்டுகொள்கிறார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த போதிலும் அவர் 48 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார். 3 நாட்களிலேயே அவர் இயல்பு நிலைக்கு திரும்பி எழுந்து லேசாக நடமாட முடியும். ஒரு வாரம் கழித்து மீண்டும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும்.
முதல்வருக்கு எலும்புகள் மாற்றப் படவோ, அறுவை சிகிச்சையின் போது கம்பிகள், நட்டுகள் மாட்டப்படவோ இல்லை என்றார்.
உடல் நலம் தேறிய பின்னர் தேர்தல் பிரசாரத்தில் முதல்வரால் ஈடுபட முடியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டாக்டர் மார்த்தாண்டம், அதிக தூர பிரயாணம் கூடாது என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை என்றார்.
முதல்வருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கு அன்பழகன் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவரிடம், முதலமைச்சர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரது பொறுப்பை யார் மேற்கொள்வது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலமைச்சர் பொறுப்பு என்பது அமைச்சர்களின் கூட்டு பொறுப்புத்தான் என்றார்.
மருத்துவமனையில் முதலமைச்சர் 10 நாட்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவரது மிக நெருங்கிய நண்பர்கள் கூட அவரை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதையொட்டி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனையில் மத்திய, மாநில அமைச்சர்கள், கருணாநிதியின் குடும்பத்தினர் திரண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications