காதலர் தினத்துக்கு எதிர்ப்பு-முத்தாலிக் கைது
பெங்களூர்: நாட்டின் பண்பாட்டை கட்டிக் காப்பதாகக் கூறிக் கொண்டு நாளை காதலர் தினத்தைத் தடுப்போம், காதலர்களை தாக்குவோம் என மிரட்டல் விடுத்த ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக் இன்று மங்களூரில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநில பாஜக அரசுக்கு மிக நெருக்கமான அவர் நாளை மாலையே விடுவிக்கப்பட்டு விடுவார் என்று தெரிகிறது.
பெங்களூருக்கு மட்டும் விதிவிலக்கு...:
முன்னதாக காதலர் தினத்தன்று பெங்களூரில் நகரில் காதலர்கள் யாரையும் நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம். அதே சமயம், கர்நாடகத்தின் பிற நகரங்களில் எங்களது தொண்டர்கள் காதல் ஜோடிகளைப் பிடித்து போலீஸாரிடமோ அல்லது பெற்றோரிடமோ ஒப்படைப்பார்கள் என்று நேற்று நிருபர்களிடம் முத்தலிக் கூறியிருந்தார்.
அவர் முத்தலிக் கூறுகையில், பெங்களூர் நகரில் காதலர் தினக் கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்தும் எங்களது திட்டத்தை விட்டு விட்டோம்.
காதலர்களைப் பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என தெரிவித்திருந்தோம். இருப்பினும் பெங்களூரில் அதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம்.
இருப்பினும் திட்டமிட்டபடி மங்களூர், பெல்காம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற நகரங்களில் எங்களது தொண்டர்கள் செயல்படுவார்கள்.
பெங்களூரில் உள்ள சில தீய சக்திகள், எங்களது அமைப்பின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படக் காத்துள்ளனர். எனவேதான் பெங்களூர் நகரில் எங்களது திட்டத்தைக் கைவிட்டுள்ளோம்.
காதலர் தினத்தை நாங்கள் எதிர்த்து வருவது சரியானதுதான். எங்களது நோக்கம் நிறைவேறியுள்ளது. சில கல்லூரிகள் எங்களது கல்லூரி வளாகத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என கடிதம் மூலம் உறுதியளித்துள்ளனர்.
அதேபோல சில ஹோட்டல்களும் கூட காதலர் தின கொண்டாட்டம் இடம் பெறாது என அறிவித்துள்ளன. இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார் முத்தலிக்.
பெங்களூரில் இந்த அமைப்பினர் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்க பல அமைப்புகள் தயாராகி வந்தன. இதனால் தான் முத்தாலிக் பெங்களூரில் எந்தப் பிரச்சனையும் செய்வதில்லை எனற முடிவுக்கு வந்திருந்தார்.
ஆனாலும் பிற பகுதிகளில் இவரது அடியாள் கும்பல் தாக்குதலை நடத்தும் என்பதால் அவரை முன்னெச்சரிக்கையாக இன்று அரசு கைது செய்துள்ளது.
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications