தமிழகத்தில் இலங்கை-ஐஎஸ்ஐ ஒற்றர்கள் ஊடுருவல்: ராமதாஸ்

திண்டிவனத்தில் உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் இருந்து ஒற்றர்களும், கைக்கூலிகளும் தமிழகத்துக்கு, குறிப்பாக சென்னை நகருக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபற்றி நான் தகவல்களை தெரிவித்து தமிழக காவல்துறை விழிப்புடன் கண்காணித்து செயல்பட வேண்டும் என்று உஷார்படுத்தியிருக்கிறேன்.
ஜி.கே. மணியும் இது குறித்து சட்டசபையில் அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால் தமிழக அரசும் காவல்துறையும் இதில் இன்னமும் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து வந்துள்ள இவர்கள், இலங்கை அரசின் ஆதரவோடு ராஜ மரியாதையுடன் இங்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள இலங்கை புத்தமத கோயில் இத்தகைய ஒற்றர்களுக்கு தஞ்சமளிக்கும் களமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
இலங்கை ஒற்றர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ஒற்றர்படையான ஐஎஸ்ஐ ஏஜென்ட்டுகளும் அங்கு தனி அலுவலகம் வைத்து செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகத்திலும் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமான அலுவலர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றியெல்லாம் தமிழக காவல்துறையின் உளவுப்படை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு நடத்துவதுடன், அத்தகையவர்களை நாடு கடத்த வேண்டும். இத்தகைய ஊடுருவல்களால் தமிழகத்தில் இலங்கை தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
பாகிஸ்தான் ஒற்றர்படையினர் சென்னையில் மட்டுமின்றி கோழிக்கோடு, பெங்களூர் ஆகிய இடங்களில் இலங்கை பாஸ்போர்ட்டுடன் தங்கியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இலங்கை தமிழர் பிரச்சனை கட்சி பாகுபாடின்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு உறுப்பினர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதில் மத்திய அரசின் கடமை பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கார்வேந்தன், என்.எஸ்.வி. சித்தன், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.
இந்த அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சனை, நாட்டின் தேசிய பிரச்சனையாக அனைத்து கட்சியினரும் கவனம் செலுத்தும் முக்கிய பிரச்சனையாக மாறியிருப்பதற்கு பாமக எம்பிக்கள் மேற்கொண்ட முயற்சி முக்கியக் காரணமாகும்.
தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதோடு நின்றுவிடாமல், காங்கிரஸ் எம்பிக்கள், தலைவர்கள் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்தும்படி, வேண்டுகோள் அல்ல; கட்டளையிட வேண்டும் என்று கேட்டு கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோருக்கு கடிதம் அனுப்ப இருக்கிறேன். முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மூலம் உதவி கிடைத்து வருகிறது.
எனவே அவர்களை அங்கிருந்து திரும்ப அழைக்கக்கூடாது என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து தந்திகளை அனுப்ப வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications