நாடாளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் விரிவான விவாதம் நடைபெறும். ஆனால் தற்போதைய மத்திய அரசின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்பு ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
எனவே முழு அளவிலான பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை. எனவே நேற்று முன்தினம் இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாளை இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கிடம்தான் நிதித்துறை பொறுப்பு கூடுதலாக உள்ளது. ஆனால் அவர் உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்து வருவதால் பிரதமரின் பொறுப்புகளை பிரணாப் முகர்ஜிதான் பார்த்துக் கொள்கிறார்.
எனவே அந்த அடிப்படையில் பிரணாப் முகர்ஜியே நாளை பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
தேர்தல் காலத்து பட்ஜெட் என்பதால் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் செய்தால் நடுத்தர வர்க்கத்து மக்களை கவரலாம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுகிறது.
இதேபோல சில முக்கிய வரிக் குறைப்புகளும் அறிவிக்கப்படக் கூடும் என தெரிகிறது.
மேலும் பொருளாதார நெருக்கடி தொடர்பான சில உதவி நிதித் திட்டங்கள், சலுகைகளும் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications