ஜெ. வழக்கு: 20வது முறையாக ஒத்திவைப்பு
சிதம்பரம்: 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் விதிமுறைகளை மீறி நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட வழக்கில் ஜெயலலிதா மீதான விசாரணையை 20வது முறையாக பரங்கிப்பேட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கடந்த 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை,புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதால் இதை எதிர்த்து திமுக எம்.பி. செ. குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவர் மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 2007ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பரங்கிப்பேட்டை கோர்ட் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது.
இதனால் வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தடை சமீபத்தில் விலக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கு ஒத்திவைக்கப்படுவது இது 20வது முறையாகும்.