இடையூறு இல்லாமல் மனித சங்கிலிப் போராட்டம்: நெடுமாறன்
சென்னை: மனித சங்கிலிப் போராட்டத்தை போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நடத்திட வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி 17 மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்பவர்கள் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாலையின் ஒருபுறமாக கைகோர்த்து நிற்க வேண்டும்.
தமிழகத்தின் வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி வரையிலும், மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், நாகை வரையிலும், கிழக்கு கடற்கரையோரமாக புதுவையில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கடலாடி, தூத்துக்குடி வரையிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும்.
இந்த 3 பாதைகளிலும் இடம் பெறாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் ஊர்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தலாம் என்று அவர் கோரியுள்ளார்.