ராஜபக்சேவின் ஆலோசகர் பதவியை நாராயணமூர்த்தி ஏற்கக் கூடாது: கர்நாடக வன்னியர்கள்
பெங்களூர்: இலங்கை அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை, தமிழர் பிரச்சினை தீரும் வரை நாராயணமூர்த்தி ஏற்கக் கூடாது என கர்நாடக வன்னியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சம்பு மகர்ஷி வன்னியர் சங்கதலைவர் மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். வாழ்வுரிமைக்காக போராடும் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டன குரல் எழுந்து வருகிறது. அயல் நாடுகளில் வாழும் தமிழர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை அதிபரின் ஐ.டி. ஆலோசகராக இன்போசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறை சம்பவங்கள் குறித்து இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி நன்கு அறிந்திருப்பார் என்று கருதுகிறோம்.
இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு பிரச்னை தீரும் வரை அந்நாட்டு அதிபரின் ஐ.டி. ஆலோசகர் பொறுப்பு ஏற்பதை நாராயணமூர்த்தி சில காலம் ஒத்திவைக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வுகாணும் வரை ஆலோசகர் பொறுப்பை ஏற்கமாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.