கிராமப்புற வாக்காளர்களை குறி வைக்கும் பட்ஜெட்!
மொத்தத்தில் கடந்த ஐந்தாண்டு கால மத்திய அரசைப் போலவே வெறுமையாக உள்ளது இந்த பட்ஜெட்.
இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் சேர்த்து வகிக்கும் (நிதியமைச்சகத்தை கையில் வைத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருப்பதால்) வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பல சலுகை அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கருதப்பட்டது.
ஆனால், இது ஒரு இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட முடியாது. வெறும் வரவு-செலவு அறிக்கையாகத்தான் அது இருக்க வேண்டும் என்பது விதி. ஆனாலும், அதையும் மீறி பல சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இதைத் தான் செய்தார். சில நாட்களுக்கு முன் அவரும் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்தார். ஆனால் அதிலும் கூட 2 சதவீத கட்டண குறைப்பு, 43 புதிய ரயில் சேவைகளை அறிவித்து தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக பொருளாதார தேக்க நிலையால் உலகமே படுவீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டுள்ள நிலையில் நிலைமையை சமாளிக்கும் சில அடிப்படை பொருளாதார கொள்கைளை இந்த இடைக்கால பட்ஜெட்டில் அரசு அறிவிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக வரிகள் குறைப்பு, வட்டிக் குறைப்புகள், வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பாக சில உதவி நிதித் திட்டங்கள், சலுகைகளும் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என எதிர்பார்ப்பட்டது. உலகம் முழுவதுமே பொருளாதார தேக்கத்தை சமாளிக்க அடிப்படைக் கட்டமைப்பில் தான் எல்லா நாடுகளும் முதலீடுகள் செய்து வருகின்றன. அதே போல இந்தியாவும் ஏதாவது செய்யும், அதற்கான அறிவிப்பு இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு வெறும் சம்பிராதாயத்திற்காக, தாக்கல் செய்ய வேண்டுமே என்ற கடமைக்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக அமைந்த கிராப்புற வாக்காளர்களை கவரும் வகையில் விவசாயத்துறைக்கு மட்டும் மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானவை: விவசாயத்துறைக்கான ஒதுக்கீடு 300 சதவீதம் அதிகரிப்பு. விவசாயக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ. 2,50,000 கோடியாக அதிகரிப்பு. விவசாய உற்பத்தியைப் பெருக்கும் தேசிய விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு. விவசாய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 13,500 கோடி ஒதுக்கீடு, 3.6 கோடி விவசாயிகளுக்கு ரூ. 65,300 கோடி அளவுக்கு வட்டி தள்ளுபடி, விவசாயக் கடன்களுக்கு வட்டிக் குறைப்பு சலுகை 2009-10ம் ஆண்டிலும் தொடரும் ஆகியவை.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் விரிவான விவாதம் நடைபெறும். ஆனால் தற்போதைய மத்திய அரசின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்பு ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
எனவே இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.