பாதுகாப்புப் பகுதியில் குண்டு வீச்சு - 134 தமிழர்கள் பலி - வயலில் கிடக்கும் உடல்கள்
இந்தியாவின் துணையுடன் இலங்கை வட பகுதியில் விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் வேட்டையாடி வருகிறது.
நவீன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்படுவதால் விடுதலைப்புலிகள் முழுமையாக பின்வாங்கி காடுகளுக்குள் சென்று விட்டனர். கடந்த சில நாட்களாக அவர்கள் எதிர் தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை.
விடுதலைப்புலிகளிடம் உள்ள ஆயுதங்களைப் பறிக்க முடியாததாலும், எதிர்பார்த்த அளவுக்கு அவர்களை ஒடுக்க முடியாததாலும், பாதுகாப்பு பகுதிகளுக்கு வரும் அப்பாவித் தமிழர்களை மூர்க்கத்தனமாக தாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது ராணுவம்.
மேலும் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் ராணுவத்திற்குக் கிடைக்கவில்லை. ராணுவத்தின் கையில் சிக்கி படுகொலையாவது, கற்பழிப்புக்குள்ளாவது, சித்திரவதைக்குள்ளாவதற்குப் பதில் புலிகள் பகுதிகளிலேயே இருந்து உயிர் விடலாம் என தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்ணில் படும் தமிழ் மக்களை கும்பல் கும்பலாக கொலை செய்து ரத்த வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இலங்கைப் படைகள்.
நேற்று முன்தினம் புதுமாத்தாளன் பாதுகாப்புபகுதி நோக்கி நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தனர். அவர்களை விமானத்தில் பறந்தபடி கண்காணித்த சிங்கள ராணுவம், பிறகு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 12 சிறுவர்கள் உள்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 132 பேர் காயம் அடைந்தனர்.
நேற்றும் புது மாத்தாளன் பாதுகாப்பு பகுதி மீது ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தினார்கள். முள்ளி வாய்க்கால், அம்பலவன் பொக்கணை, புதுக்குடியிருப்பு, சோம்பை ஆகிய இடங்களில் உள்ளபாது காப்புபகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை தாக்குதல் நடந்தது.
இதில் புதுமாத்தாளனில் 12 தமிழர்கள், முள்ளி வாய்க்காலில் 6 தமிழர்கள், அம்பலவன் பொக்கணையில் 5 தமிழர்கள், புதுக்குடியிருப்பில் 12 தமிழர்கள், சோம்பாவில் 13 தமிழர்கள் உள்பட 56 தமிழர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 134 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்-சிறுமியராகும்.
பாதுகாப்பு பகுதி மட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் குக்கிராமங்கள் மீதும் சிங்கள ராணுவம் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தி வருவதால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களது உடல்கள் வயல்களில் சிதறிக் கிடக்கிறது.
கை, கால்கள் சிதறியும், உடல் பாகங்கள் சிதிலமடைந்தும் தமிழர்கள் படு கோரமாக கொல்லப்பட்டுக் கிடக்கின்றனர்.
ஈழத் தமிழர்கள் அனைவரும் தங்கள் ஊர்களில் தற்காப்புக்காக நீண்ட குழிகள் வெட்டி வைத்திருப்பதுண்டு, தமிழர்கள் புணர்வாழ்வுக் கழகத்தால் மீட்கப்படும் உடல்கள், இந்த குழிகளில் அடக்கம் செய்யப்படுகிறது.
தூக்கிச் செல்ல உறவினர்களோ, வாய் விட்டு அழ சொந்தங்களோ இல்லாத நிலையில் தமிழர்களின் உடல்கள் ஆதரவற்றவர்களின் பிணங்கள் போல அடக்கம் செய்யப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களில் தற்போது சுமார் 30 ஆயிரம் பேர் தான் சிங்கள அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிக்கு வந்துள்ளனர்.
வந்தவர்களை அரவணைத்து காக்காமல் கிடைத்த வரை லாபம் என்பது போல அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழிந்து இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றனர் இலங்கைப் படையினர்.
இடம் பெயராத சுமார் 2 லட்சம் பேர் மீதும் பீரங்கித் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்படுகிறது.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் போல் வேறு இடங்களுக்கு ஓடியபடி உள்ளனர். உணவு, உடை, மருந்து, அத்தியா வசியப்பொருட்கள் எதுவும் இல்லாமல் கண்ணீர் விட்டபடி தமிழர்கள் அங்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பு பகுதிக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், தமிழர்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். விசாரணை என்ற பெயரில் வாலிபர்கள் துன்புறுத்தப்படுவதும், இளம் பெண்கள் பாலியியல் பலாத்காரம் செய்யப்படுவதும் முல்லைத் தீவில் அதிகரித்தப்படி உள்ளது.













Click it and Unblock the Notifications