ஆயிரக்கணக்கான தமிழர்களுடன் பிரபாகரன் தற்கொலை செய்யப் போகிறார்-கூறுகிறார் ராஜபக்சே தம்பி
கொழும்பு: ஆயிரக்கணக்கான தமிழர்களுடன், முல்லைத்தீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யப் போகிறார். இதை வீடியோவில் படம் பிடித்து உலகம் முழுவதும் புலிகள் காட்டத் திட்டமிட்டுள்ளனர் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை அரசின் மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பாசில் அளித்துள்ள பேட்டியில், இலங்கை ராணுவம் கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் கடைசிப் புகலிடத்தை நெருங்கி விட்டது.
தனது கடைசி பதுங்குமிடத்தை ராணுவம் விரைவில் நெருங்கி விடும் என பிரபாகரன் கருதுகிறார். எனவே ராணுவத்திடம் சிக்கி உயிரிழக்கவோ, அல்லது உயிருடன் பிடிபடவோ பிரபாகரன் விரும்பவில்லை. அதற்கு முன்னதாகவே ஏதாவது ஒரு வகையில் தற்கொலை செய்து உலகின் கவனத்தை ஈர்க்க அவர் முடிவு செய்துள்ளார்.
இலங்கை உளவுத் துறை திரட்டியுள்ள தகவல்கள் மூலம் பிரபாகரன் தற்கொலை முடிவு தெரிய வந்துள்ளது.
ஈழத்துக்காகவும், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்தவும், பிரபாகரன் உயிர்த்தியாகம் செய்து கொள்வார் என்று உளவுத் துறை சொல்கிறது.
நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் முல்லைத்தீவில் உள்ள கடற்கரைப் பகுதியில், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதை வீடியோவில் படம் பிடித்து உலகம் முழுக்க காட்ட ஏற்பாடு நடந்து வருவதாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. தன் உயிர்த்தியாகத்தைபார்த்த பிறகாவது உலக நாடுகள் தலையிட்டு ஈழம் மலர ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று பிரபாகரன் நம்புவதாக கூறப்படுகிறது.
இந்த உயிர்த்தியாக நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த பிரபாகரன் ஏற்பாடு செய்து வருவதாகவும், இதற்காக முல்லைத் தீவில் கடற்கரைபகுதி ஒன்றுக்கு வந்து கூடுமாறு தன் சகாக்களுக்கு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாக உளவுத் துறை தகவல்கள் எங்களுக்குத் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார் பாசில்.
பாசிலின் இந்த பேச்சு, ஈழத் தமிழர்களை பீதிக்குள்ளாக்கவும், இனியும் பிரபாகரனை நம்பாதீர்கள் என்று பொய்யான பிரசாரத்தை மேற்கொள்ளும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.
இதற்கு முன்பும் விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தகவல்களையும், பிரசாரங்களையும், கட்டுக் கதைகளையும் இலங்கை அரசும், ராணுவமும் பரப்பியுள்ளன. ஆனால் அவர்கள் சொன்னது போல எதுவுமே நடக்கவில்லை. இந்த நிலையில் பிரபாகரன் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக புதுக் கதை ஒன்றை பாசில் மூலம் ராஜபக்சே அரசு கிளப்பி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications