லாரி மீது கார் மோதி 5 பேர் பலி !
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில், காரில் பயணம் செய்த 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஊட்டிக்கு சென்றது. அந்த லாரியை டிரைவர் அசோகன் ஓட்டிச் சென்றார். அவர் லாரியை காரமடை- மேட்டுப்பாளையம் ரோடு சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார்.
அப்போது, நள்ளிரவு சுமார் 3.00 மணிக்கு கேரளாவிலிருந்து கார் ஒன்று அசுர வேகத்தில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த உர லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி, விபத்தில் சிக்கியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர்கள் பிரசாத் (23), பிரஷோப் (22), ராகுல் (23), சபரீஷ் (22), ஜிப்சன் (20) என தெரிய வந்துள்ளது.