தமிழர்களின் வேதனையை வெளிப்படுத்த சீனப் பெருஞ் சுவர் போல நிற்போம்: வைகோ
சென்னை: நமது வேதனையை வெளிப்படுத்த ஈழத் தமிழர்களை காக்க, தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோர்த்து நிற்போம், சீனத்துப் பெருஞ்சுவரென அணிவகுத்து நிற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மொத்த தமிழ் இனத்தையே அழிக்க சிங்கள அரசு துடிக்கிறது. இந்திய அரசு இதற்கு உடந்தையாக இருக்கிறது.
முத்துக்குமார் மேனியை எரித்த தீ, ஜெனீவாவில் முருகதாஸ் உடம்பிலும் எரிந்தது. தீயின் நாக்குகள் பள்ளப்பட்டி ரவியை சீர்காழி ரவிச்சந்திரனை சென்னை அமரேசனை, மலேசிய ராஜாவைத் துடிக்க துடிக்க உடலைக் கருக்கி உயிரைப் பறித்துவிட்டது.
இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஒங்கி குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த ஈழத் தமிழர்களை காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோர்த்து நிற்போம் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது.
பிப்ரவரி 17ம் நாள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம்கோர்த்து நிற்போம். சீனத்துப் பெருஞ்சுவரென வரிசையாக நிற்போம்.
உணவும் இன்றி மருந்தும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடியும் தமிழர்கள் அங்கே, குண்டுவீச்சில் உடல்கள் சிதறி ரத்த வெள்ளத்தில் மிதக்கும் கொடுமை அங்கே.
வீடு இழந்து, வாழ்விழந்து தங்கள் பூர்வீக மண்ணிலேயே பீரங்கி குண்டுகளால் வேட்டையாடப்படும் கொடுமை அங்கே. அழுவதற்குக்கூட அவர்களுக்கு சக்தி இல்லையே.
நமக்கு கரங்கள் இருப்பது துன்புறும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கன்றோ என்ற உணர்வுடன் மாலை 4 மணிக்கே ஆங்காங்கு மனித சங்கிலிக்கு ஆயத்தமாகுங்கள். 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலியாக மாறுங்கள்.
ஈழத்தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் அமைப்போம் மனித சங்கிலி.
தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும் என்று கூறியுள்ளார் வைகோ.