'தேர்தல் வரட்டும்'- சிதம்பரத்துக்கு நெடுமாறன் பதில்
திருச்சி: இலங்கை தமிழர் விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை அப்போது தான் ஆளுங்கட்சிக்கு தெரிய வரும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைபாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
பிரபாகரனை இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என்று கேட்கிறார்கள். அங்கு கடைசியாக நடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழ்த் தேசிய முன்னணி அமைக்கப்பட்டு அதன் தேர்தல் அறிக்கையிலேயே பிரபாகரன் தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதி என்று அறிவித்திருக்கின்றனர்.
இலங்கை தமிழ் மக்களின் இந்த முடிவை, இங்குள்ளவர்கள் ஏற்க மறுத்து கேள்வி எழுப்புகின்றனர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் முழு தமிழ் இன அழிப்புக்கு வழிவகுத்துவிடும். ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களைக் காக்கும் நோக்கம் கொண்டதல்ல. இலங்கைக்கு உதவுவதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இன்று நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை முடக்கும் நிலை தொடருமென்றால், அது மாநில அரசுக்கு எதிரான போராட்டமாகவும் மாறும்.
தமிழகத்தின் பெரிய கட்சிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின்போது தான் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற உண்மை நிலவரம் தெரியும் என்றார் நெடுமாறன்.