கிராம் ரூ.1404: சாமானியர்களால் தங்கம் வாங்க முடியுமா?
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு பவுன் ரூ. 11,232-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 1,404.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரூ. 9 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரத்துக்குள்தான் தங்கத்தின் விலை இருந்து வந்தது.
ஆனால் தொடர்ந்து பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வந்ததாலும், சர்வதேச நிதி நிலைமை படு மோசமடைந்ததாலும், கடந்த சில மாதங்களாகவே கிடுகிடுவென ஏறிக்கொண்டு வந்தது தங்கத்தின் விலை.
கடந்த வாரம் ரூ. 10 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் விலை மீண்டும் குறையும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ரூ. 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தை உள்ளபட பல நாட்டு பங்குச் சந்தைகளும் வீழந்துவிட்டன. இருக்கிற பங்குகளை விற்றுவிட்டு, பாதுகாப்பாக முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். இதனால், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தங்கம் இருந்தால், 'அழகுக்கு அழகுமாச்சு, பாதுகாப்புமாச்சு' என்ற நினைப்பு பரவிவருகிறது.
இதனாலேயே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 288 அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி ஒரு பவுன் விலை ரூ. 11,232. ஒரு கிராம் விலை ரூ. 1,404.