போர் நிறுத்தம் ஏற்பட அழுத்தமான நடவடிக்கை தேவை: ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திடீரென டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
சுமார் இருபது நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சோனியாவுடன் ராமதாஸ் விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,
இலங்கை தமிழர் பாதுகாப்பு பற்றி, சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினேன். அவர் இந்த விஷயத்தில் மிகவும் கவலை கொண்டு இருக்கிறார்.
போர் நிறுத்தம் ஏற்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று சோனியா காந்தி உறுதி அளித்தார்.
சோனியா காந்தி அறிவுரைப்படி, வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேச இருக்கிறேன்.
போர் நிறுத்தம் ஏற்பட விடுதலைப்புலிகள் மட்டும் ஆயுதங்களை கீழே போட்டால் போதாது. ராணுவமும் போரை நிறுத்த வேண்டும். இதற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
இலங்கை பிரச்சினையில், இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. எனவே மனிதாபிமான உணர்வுடன் மத்திய அரசு செயல்பட்டு, இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய நாட்டு சபை மூலமாகவும், போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமக விலகுமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கூட்டணியில் இருப்பதால் தான் உரிமையுடன் இலங்கை பிரச்சினை பற்றி சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன் என்றார் ராமதாஸ்.
சோனியா காந்தியை சந்தித்த ராமதாஸ் அவரிடம் ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தார்.
அதில், இலங்கையில், தமிழர்கள் வாழும் வன்னி பகுதியில் 3 லட்சம் தமிழர்கள், வீடுகளை பூட்டி விட்டு காடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் மீது இலங்கை விமானங்கள் ரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் காயம் அடைந்து மருத்துவ வசதி இன்றி தவிக்கிறார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், தமிழர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரி, தமிழ் நாட்டில் தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. எனவே மத்திய அரசு இந்த பிரச்சினையில் உடனே தலையிட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். அமைதி பேச்சு வார்த்தைக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்ததாக பாமக தெரிவித்துள்ளது.