'தமிழர்களுக்கே லாபமாம்': புல்லட் ரயிலுக்கு எதியூரப்பா எதிர்ப்பு
பெங்களூர்: சென்னை- பெங்களூர் இடையே புல்லட் ரயிலை அறிமுகப்படுத்துவதற்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்திற்கே அதிக பலன்கள் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சென்னை- பெங்களூர், பெங்களூர்- எர்ணாகுளம் ஆகிய மார்க்கங்களில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்திருந்தார்.
இந்த யோசனையை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்துள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா. தண்ணீரில்தான் இதுவரை கர்நாடகம் விளையாடி வருகிறது என்றால் இப்போது ரயிலிலும் மண்ணை அள்ளிப் போடும் முயற்சியாகவே இதை கருத வேண்டியுள்ளது.
சென்னை- பெங்களூர் புல்லட் ரயில், கர்நாடகத்திற்கு லாபம் தருவதாக இருக்காது என்று எதியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து லாலு பிரசாத் யாதவுக்கு எதியூரப்பா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சென்னை- பெங்களூர் அதிவேக ரயில் (புல்லட் ரயில்) ஹூப்ளி வழியாக மும்பை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தால் மட்டுமே இந்தத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள், ஆய்வுக் கூட்டங்களில் கர்நாடகம் பங்கேற்கும்.
மேலும் இந்த ரயிலை மைசூர் வரைக்கும் கூடுதலாக இணைக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் அது தமிழர்களுக்கும், கேரளாவுக்கும் மட்டுமே பயன்தரும். அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் வந்து போகத்தான் இது உதவும். கர்நாடக மக்களுக்கு இதனால் எந்த பலனும் கிடைக்காது.
எங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாவிட்டால், இந்தத் திட்டத்திற்கு கர்நாடகத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மேலும் ரயில்வேயின் திட்டங்களுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று கூறியுள்ளார் எதியூரப்பா.
ஆனால் ஹூப்ளி, மைசூருக்கு புல்லட் ரயில் விடுவதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே அந்தத் தடத்தில் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மைசூர், ஹூப்ளி வழியாக புல்லட் ரயில்களை இயக்குவது என்பதை நடைமுறையில் சாத்தியமில்லாதது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நமக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் எதியூரப்பாவின் எண்ணமாகத் தெரிகிறது.