நெல்லை: 21ல் ஆறுகள் இணைப்பு திட்டம் துவக்கம்
நெல்லை: தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைக்கும் திட்டம் ரூ. 369 கோடி செலவில் வரும் 21ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனால் துவக்கப்பட இருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பாசன தேவையை நிறைவு செய்வது பாபநாசம் அணையாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 143 அடி கொள்ளளவுடன் அமைந்துள்ள இந்த அணையின் மூலமாக இரண்டு மாவட்டங்களிலும் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் போதிய மழை பெய்து பாபநாசம் அணை நிரம்பிய போதிலும் லட்சகணக்கான கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலுக்கு சென்று விடுகிறது.
எனவே வெள்ளக்காலங்களில் கடலுக்கு செல்லும் உபரி நீரை வறட்சி பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு திருப்பி விட வேண்டும் என்று இரண்டு மாவட்ட மக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு செயல்வடிவம் கொடுத்து இத்திட்டத்திற்கு ரூ.369 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்திட்டத்தை கடந்த பிப் 8ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
இதற்கான விழா வரும் 21ம் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாளகத்தில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications