இது உப்பு சப்பில்லாத பட்ஜெட்- வைகோ
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகின்ற மாய்மால அறிக்கையாக இருக்கிறது. வளர்ச்சிக்கான திட்டம் எதுவுமில்லாமல் உப்பு சப்பில்லாத பட்ஜெட்டாக இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
தமிழகு பட்ஜெட் தொடர்பாக சென்னையில் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,
விவசாயம் செழிக்க தேவையான உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க எவ்வித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை விரைவில் முடிப்போம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு போதுமான தொகை வழங்கப்படவில்லை.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு எந்த திட்டம் வகுக்கப்படவில்லை. இலங்கை ராணுவத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை காக்க தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மொத்தத்தில் அரைத்த மாவையே அரைத்து, உப்பு சப்பில்லாத பட்ஜெட் தரப்பட்டுள்ளது என்றார் வைகோ,
திருப்தி அளிக்கவில்லை-நல்லகண்ணு:
நாகப்பட்டிணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறுகையில்,
மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய வரிகள் விதிக்கப்படவில்லை என்றாலும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டங்களும் இதில் இடம்பெறவில்லை.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் நிலவரி குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கூட்டுறவுக் கடனுக்கு வட்டித் தள்ளுபடி சலுகைப் பெற கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு செய்திருந்தாலும், சேது சமுத்திரத் திட்டம் குறித்த கொள்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்த மாற்றமும் கொள்ளவில்லை. கூட்டணிக்காகக் கொள்கை முடிவை மாற்றிக் கொள்ளமாட்டோம் என்றார் நல்லகண்ணு.
இது திமுக தேர்தல் அறிக்கை-சிபிஎம்:
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில்,
நிதிநிலை அறிக்கையில், தொழில் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தேக்கத்தை உடைக்க உருப்படியான எந்த ஆலோசனையும் இல்லை. வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தைத் தூக்கி நிறுத்த புதிய திட்டம் எதுவும் இல்லை.
சமச்சீர் கல்வி பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் அமலாகியுள்ளது. தரிசு நில விநியோகத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.
தொழில், விவசாயம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படையான அம்சங்களுக்குத் தீர்வு காணாமல் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை, வர்ணம் பூசும் ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது என்றார் வரதராஜன்.