காங்கிரஸில் இணைந்தார் அஸாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அஸார் கடந்த 2000ம் ஆண்டில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி, கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டார். தடை விதிக்கப்பட்டாலும் இவருக்குகென அவரது சொந்த மாநிலமான ஆந்திரா மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளி்ல் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இதையடுத்து இவரை வளைத்து போட்டு தங்கள் கட்சியின் செல்வாக்கை உயர்த்தி கொள்ள பல கட்சியினரும் முயற்சித்து வருகின்றனர். உருது பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் வீட்டில் வைத்து தெலுங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை சந்தித்தார்.
இதனால் அவர் அக்கட்சியில் சேரப்போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால், அதை அஸார் உறுதியாக மறுத்து விட்டார். இந்நிலையில் டெல்லி வந்த அஸாருதீன், இன்று பிற்பகலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை அப்போது அவர் இணைத்துக் கொண்டார்.
பின்னர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் மொய்லி பேசுகையில், அஸாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்றார்.
மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே என்று பின்னர் அஸாருதீன் தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் அஸார் ஹைதரபாத்தில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் அகில இந்திய மஜிலிஸ் இதிகதுல் முஸ்லீமீன் கட்சி சற்று பலமாக உள்ளது. இந்த ஓட்டு வங்கியை உடைத்து, வாக்குகளை பிரிக்கும் முகமாகவே அஸாருதீனை காங்கிரஸ் இழுத்துள்ளதாக கருதப்படுகிறது.