கன்டெய்னர்களில் அணு ஆயுத கடத்தல் அபாயம்
டெல்லி: நீர் வழிப் போக்குவரத்தில் உரிய கட்டுப்பாடுகள் இல்லாததை அடுத்து தீவிரவாதிகள் கப்பல் கன்டெய்னர்கள் மூலம் அணு ஆயுதங்களை கடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கப்பற்படை தலைவர் அட்மிரல் சுரீஷ் மேத்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவிலான சரக்குப் போக்குவரத்தில் நான்கில் மூன்று பங்கு கன்டெய்னர்கள் மூலம் தான் நடக்கிறது. மேலும் நீர்வழி போக்குவரத்துக்கு உரிய கட்டுப்பாடுகள் எதுவும் இதுவரை விதிக்கப்படவில்லை. இதனால் தீவிரவாதிகள் மும்பையில் கடல்வழியாக தாக்குதல நடத்தினர்.
இந்நிலையில் டெல்லியில் தேசிய கடல்சார் அறக்கட்டளையின் கருத்தரங்கில் பேசிய இந்திய கப்பற்படை தலைவர் சுரீஷ் மேத்தா கூறுகையில்,
நீர்வழி போக்குவரத்தில் உரிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்படாததால் அதை பயங்கரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கடல் மார்க்கமாக அணு ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் உள்ள நிலையில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்
கன்டெய்னர்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்க படுவதில்லை. அனைத்துத் துறைமுகங்களிலும் கன்டெய்னர்களை எக்ஸ்-ரே கருவி மூலம் சோதிக்க வேண்டியது அவசியம். இதேபோல அனைத்து நாடுகளிலும் உள்ள துறைமுகங்களில் கன்டெய்னர்கள் முழுமையாக சோதிக்கப்பட்டன என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
கன்டெய்னர்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் பணியை அமெரிக்காவின் சிஎஸ்ஐ அமைப்பு செய்து வருகிறது. இதைப் போல அமெரிக்க பாதுகாப்பு அமைப்பை இந்தியத் துறைமுகங்களில் ஈடுபடுத்த முயன்றால் அது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலாக அமையும்.
இதனால் அவ்வமைப்புக்கு இணையான நடவடிக்கைகளை விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியாவிலிருந்து செல்லும் கன்டெய்னர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
தலிபான் அமைப்பினர் இந்தியா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக விடுத்துள்ள மிரட்டல் குறித்து கேட்டதற்கு, இதுபோன்ற மிரட்டல்கள் இனி எதிர்காலங்களில் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications