விடுமுறை-ஈடுகட்ட சனி-ஞாயிறு கல்லூரி உண்டு
சென்னை: இலங்கை தமிழர் போராட்டத்தை அடுத்து தமிழக கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பலியாவதை தடுக்க தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
மாணவர்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரிகள் மீண்டும் 9ம் தேதி முதல் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டது.
இதனால் இரண்டு வாரங்களுக்கு மேல் பாடங்கள் நடத்த முடியாமல் போய்விட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் வைத்து பாடங்களை வேகமாக நடத்துகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள சில துறைகளில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வகுப்பு நடக்கிறது. அந்த நாட்களில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதே போல அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் செய்முறை தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் ஏப்ரல் மாதம் வரை விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் தொடரும் என தெரிகிறது.